விருதுநகர், ஏப்.16: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 லட்சத்து 89 ஆயிரம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்து 89 ஆயிரத்து 416 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி வீடு, வீடாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் பூத் சிலிப் எனப்படும் வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் நாளை மறுநாள் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது பூத் சிலிப்பை மட்டும் வைத்து கடந்த தேர்தல்களில் வாக்களித்தது போல் வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பணியாளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு, நூறு நாள் வேலை திட்ட பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.